சனி, 4 ஜூலை, 2009

ஒரு பேராசிரியரின் அபுகரீப் சிறைச்சாலை திகில் அனுபவங்கள்

இது 2007 பிப்ரவரி மாதம் மலேசிய தலை நகர் கோலாலாம்பூரில் வைத்து ஈராக் நாட்டைச்சார்ந்த பேராசிரியர் அலி ஸலால் அவர்கள் தனக்கு ஈராக்கின் அபுகரீப் சிறைச்சாலையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரால் அளிக்கப்பட்ட சித்திரவதைக் கொடூரத்தைப்பற்றி அளித்த வாக்குமூலம். ஈராக்கிய குடிமகனான அலி ஸலால் என்ற அலி SH அப்பாஸாகிய நான் முழுமனதோடும் உண்மையோடும் முறையாக பிரகடனப்படுத்தும் வாக்குமூலம் இது:
எனக்கு 45 வயது. நான் தற்போது ஜோர்டானிலிலுள்ள அம்மானில் வசிக்கிறேன்.
நான் ஈராக்கில் அல் ஆலமியா என்ற நகரில் இஸ்லாமிய கல்வியை போதிக்கும் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதன் நோக்கம் எனக்கு அபுகரிப் சிறைச்சாலையில் அளிக்கப்பட்ட சித்திரவதைகளை வெளிக்கொண்டுவருவதுதான். 2003 அக்டோபர் 13-இல் நான் அல் அம்ரயா என்ற பகுதியிலுள்ள ஒரு மஸ்ஜிதுக்கு தொழச் சென்றுக்கொண்டிருந்தேன்
அவ்வமயம் அமெரிக்க ராணுவத்தினர் என்னை திடீரென கைதுச்செய்தனர். பின்னர் என்கைகளை பின் பக்கமாக கட்டினர். என் தலையை ஒரு பையால் சுற்றி மூடினர். பின்னர் என்னை தூக்கிச்சென்று அல் அம்ரயாவிலுள்ள அமெரிக்க ராணுவமுகாமிற்குக் கொண்டுச் சென்று ஒரு சிறிய சிறையில் அடைத்தனர். அந்த ராணுவமுகாமின் கமான்டராக இருக்கக்கூடிய கேப்டன் பிலிப்ஸ் என்னிடம் தனது மேலதிகாரியிடமிருந்து என்னை கைதுச்செய்ய ஒரு கட்டளை வந்ததாகவும் காரணம் என்னவென்று தனக்கு தெரியாது என்று கூறிவிட்டுச்சென்றான். நான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டேன்.
இரண்டு நாள்கள் கழித்து நான் அபுகரிப் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். முதலில் எனக்கு உடல் ரீதியான சோதனையை நடத்தினார்கள். அப்போது என்னிடம் முறைகேடாக நடந்துக்கொண்டார்கள். பின்னர் என்னை மற்ற கைதிகளுடன் சேர்ந்து தரையில் இருக்கச்செய்தனர். பின்பு எங்களை விசாரணை அறைக்கு இழுத்துச்சென்றனர். அது அறை என்று கூற இயலாது. உண்மையில் அது ஒரு கழிவறை என்றுச்சொல்லலாம். கிட்டத்தட்ட 2மீ.நீளம் 2.மீ அகலம் கொண்டதாக இருந்தது. மேலும் அதில் எங்கள் கணுக்கால் அளவுக்கு மனித கழிவு கலந்த நீர் நிறைந்திருந்தது. அதில் என்னை இருக்கச்சொன்னார்கள். விசாரணை அதிகாரி கதவுக்கு வெளியே மொழிப்பெயர்ப்பாளருடன் நின்றுக்கொண்டிருந்தார். விசாரணைக்குப்பின்னால் என்னை அந்த கழிப்பறையிலிருந்து மாற்றினார்கள். மற்றொரு கைதியை அந்த அறைக்குள் இருத்தினார்கள். அப்போது காவாலாளிகள் பிற கைதிகளுக்கு முன்னாலேயே அந்த கழிவு நீரில் சிறுநீர் கழித்தார்கள்.
விசாரணை அதிகாரி என்னிடம் கேட்ட முதல் கேள்வி நீ சுன்னியா? ஷியாவா? என்று. என் வாழ்க்கையில் நான் முதன் முதலாக கேள்விப்படும் கேள்வி. நான் இந்த கேள்வியைக்கேட்டு ஆச்சரியமடைந்தேன் காரணம் ஈராக்கியர்களுக்கு மத்தியில் இந்த பாகுபாடு இருந்ததில்லை. மீண்டும் அந்த விசாரணை அதிகாரி என்னிடம் அவர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்குமாறும் கேள்விக்கு வெளியேச் செல்லவேண்டாம் என்று கூறிவிட்டு ஈராக்கில் சுன்னி, ஷியா மற்றும் குர்து இனத்தவர்கள் இருப்பதாக கூறினார்.
விசாரணை அதிகாரிகள் சிவிலியன் ஆடையை அணிந்திருந்தனர். மொழிப்பெயர்ப்பாளரான ஆப்ரோ-அமெரிக்கரோ ராணுவ உடையிலிருந்தார். என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் ஒரு ஈராக் முஸ்லிம் என்று பதில் கூறினேன். ஆனால் அவர் என் பதிலை ஏற்க மறுத்ததோடு என் மீது கீழ் கண்ட குற்றச்சாட்டுகளையும் கூறினார்:
அ.நான் ஒரு ஷியோனிஷ செமிட்டிக் எதிர்ப்பாளனாம்.
ஆ.நான் ஈராக்கில் நடக்கும் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரை ஆதரிக்கிறேனாம்.
இ.ஆக்கிரமிப்புக்கெதிரான போருக்கு மக்களை தூண்டுகிறேனாம்.
ஈ.எனக்கு உஸாமா பின் லேடன் இருக்கும் இடம் தெரியுமாம்.
நான் விசாரணை அதிகாரியின் மேற்கண்ட கேள்விகளுக்கு மறுப்புதெரிவித்துவிட்டு கூறினேன், "முஸ்லிம்களும் யூதர்களும் ஒரே வம்சாவழியிலிருந்து வந்தவர்கள். நான் ஒரு ஊனமுற்றவன். என் கை ஊனமடைந்துள்ளது” என்று. விசாரணை அதிகாரி என்னுடைய கை ஊனமடைந்ததற்கு காரணம் அமெரிக்க ராணுவத்திற்கெதிராக நடந்த தாக்குதல் என்று கூறினார். மேலும் அவர் என்னிடம் நான் சமுதாயத்தில் முக்கியமான நபர் என்று அவர்களுக்கு தெரியும் என்றும் அவர்களுடைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக்கொடுத்தால் எனது கைக்கு மருத்துவம் செய்ய உதவுவதாகவும் தெரிவித்தார். நான் ஒத்துழைக்காதபொழுது அவர் கேட்டார் அமெரிக்க ராணுவத்தை நீங்கள் எவ்வாறு கருதுகிறீகள் விடுதலையைப் பெற்று தருபவர்களாகவா? அல்லது ஆக்கிரமிப்பாளர்களாகவா? நான் பதில் கூறினேன் "ஆக்கிரமிப்பாளர்கள்" என்று. கடும் கோபமடைந்த அவர் என்னை குவான்டனாம சிறைக்கு மாற்றப்போவதாகவும் அங்கு மிருகங்கள் கூட வாழமுடியாது என்றும் கூறினார். பின்னர் அங்கிருந்து வேறு ஒரு அறைக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு என் விரல் ரேகையை எடுத்தார்கள்.எனது கண்களை போட்டோ எடுத்தார்கள். எனது உமிழ் நீரை டி.என்.எ சோதனைக்கு அனுப்பினார்கள். பின்னர் என்கையில் ஒரு அட்டையைக்கட்டினார்கள் அதில் எனது பெயர், எண், எனது மதம் மற்றும் முன்பு கைதான விபரம் ஆகிய விபரங்கள் அடங்கியிருந்தது. பின்னர் என்னை அவர்கள் மாறி மாறி அடித்தார்கள்.ஒரு ட்ரக்கில் ஏற்றி அபுகரிபின் மற்றொரு சிறைக்கு இழுத்துச்சென்றார்கள். அந்தச்சிறையானது திறந்தவெளியில் இருந்தது. சுற்றிலும் மதிலும் அதன் மேல் முள்களாலான வேலி பதிக்கப்பட்டிருந்தது. சிறை 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் 5 டென்டுகள் (கூடாரம்) இருந்தது. ஒவ்வொரு டென்டை சுற்றிலும் முள்வேலிகள் பதிக்கப்பட்டிருந்தன. நான் ட்ரக்கிலிருந்து இறக்கப்பட்டேன். என் நெற்றியில் "பிக் ஃபிஷ்" (Big Fish) என்று ராணுவத்தினர் எழுதினர். அந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் "பிக் ஃபிஷ்" என்றே அழைக்கப்படுகின்றனர். எனக்கு முகாம் "பி" பிரிவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த முகாமின் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. ஒவ்வொரு டென்டிலும் 45 முதல் 50 கைதிகள் வரை அடைக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு கைதிக்கும் 30செ.மி நீளம் 30 செ.மி அகலம் கொண்ட இடமே அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் கழிப்பறைக்குச்செல்ல 2லிருந்து 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. குறைந்தளவு தண்ணீரே அங்கி கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டென்டிற்கும் 60 லிட்டர் தண்ணீரே வழங்கினார்கள் அதில்தான் அனைத்து கைதிகளும் குடிக்க, துவைக்க, குளிக்க மற்றும் சித்திரவதைக்குப்பின்னால் காயங்களை கழுவ பயன்படுத்தவேண்டும். நாங்கள் பல மணி நேரம் நிற்கவைக்கப்பட்டோம். சில நேரங்களில் தண்டனை இவ்வாறிருக்கும், எங்களுக்கு உணவு வழங்கமாட்டார்கள். வழங்கப்படும் உணவும் இவ்வாறிருக்கும், அதிகாலை 5 மணிக்கு காலை உணவு, காலை 8 மணிக்கு மதிய உணவு, மதியம் 1 மணிக்கு இரவு உணவு. ரமலானில் 2 நேரம் உணவு வழங்குவார்கள் நடு இரவு 12 மணிக்கும், நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் பகல்வேளையிலும், காரணம் மார்க்க கடமையான நோன்பை முறிப்பதற்கு.
என்னுடைய சிறை வாழ்க்கையில் இரண்டு முறை விசாரணைச் செய்யப்பட்டேன் இரண்டு முறை சித்திரவதையும் செய்யப்பட்டேன். ஒவ்வொருமுறையும் குவான்டனாமோ சிறைக்கு அனுப்பிவிடுவதாக விசாரணை அதிகாரிகள் என்னை மிரட்டினர். நான் சிறையிலிருக்கும்பொழுது எனது சிறைத்தோழர்கள் வாயிலாக நான் கேள்விப்பட்டது அவர்கள் சிகரெட் கனல்களால் சுடப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் மயக்கமருந்து குத்தி ஏற்றப்படும். அவர்களுடைய ஆசன வாய்வில் மரக்கட்டை, கம்பி உள்ளிட்ட உபகரணங்கள் குத்தி ஏற்றப்படுமாம். அவர்கள் முகாமிற்கு திரும்பும்பொழுது இரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறும். சிலருக்கு எலும்புகள் முறிந்திருக்கும். என்னுடைய சிறை முகாமுக்கு சில கைதிகள் ரகசிய சிறையிலிருந்துக் கொண்டு வரப்பட்டார்கள். பின்னர் நான் தெரிந்துக்கொண்டேன் அந்த சிறை வடக்கு பாக்தாதிலுள்ள “அரேபியன் ஆயில் இன் ஸ்டிடியூட்”டிற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கியது என்று. அங்கிருந்துக்கொண்டுவரப்பட்டவர்கள் அதிகமான காயத்திற்கு உள்ளாகியிருந்தார்கள். ஒருமாதத்திற்குப்பிறகு என்னுடைய எண்ணைக்கூறி அழைத்தார்கள். பின்னர் என்னுடைய தலையில் ஒரு பையை போட்டு கட்டினார்கள். எனது கைகளை பின்பக்கமாக கட்டிவிட்டு எனது கால்களையும் கட்டி வேறொரு சிறைக்கு அழைத்துச்சென்றார்கள். நான் சிறைக்குக்கொண்டுப்போகப்பட்டவுடன் என்னுடைய ஆடைகளை கழற்றுமாறு அறபு மொழியில் கூறினார்கள். நான் மறுக்கவே என்னுடைய ஆடைகளை கிழித்து எறிந்தார்கள். பின்னர் என்னை ஏணிப்படியின் படிக்கட்டுகளில் வைத்து கட்டினார்கள், நான் அசையமுடியாதவாறு. பின்னர் என்னை மாறி மாறி அடித்தார்கள். நான் ஏணிப்படியின் மேல்பகுதிக்குச்சென்றபோது என்னை சில இரும்புக்கட்டைகளில் வைத்துக்கட்டினார்கள். பின்னர் என்னை மனிதக்கழிவில் தூக்கி வீசினார்கள். மேலும் என் மீது சிறுநீர்க் கழித்தார்கள். அடுத்து என் தலைமீது துப்பாக்கியை வைத்து என்னை கொல்லப்போவதாக கூறினார்கள். சிறையிலிருந்த ராணுவ வீரன் ஒருவன் ஒரு மெகாபோனில் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினான். இந்த நேரத்தில் நான் பிற கைதிகள் சித்திரவதை தாங்கமுடியாமல் அலறுவதை கேட்டேன். இது மறு நாள் காலைவரைத் தொடர்ந்தது. காலை நேரத்தில் ஒரு இஸ்ரேலி எனக்கு முன்னால் வந்து நின்றான். எனது தலையிலிருந்த பையை கழற்றிவிட்டு அறபு மொழியில் பேசினான். அவன் ஃபலஸ்தீனில் பல கைதிகளை விசாரணைச்செய்து சித்திரவதைச் செய்ததாகக் கூறினான். எந்த கைதி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையோ அவர்களை சுட்டுக்கொல்வதாக கூறினான். என்னிடம் திரும்ப திரும்ப போராளிகளின் பெயர்களை கூறுமாறு கூறினான். நான் எந்த போராளியையும் எனக்கு தெரியாது என்று கூறினேன். அதை அவன் நம்பவில்லை.என்னை தொடர்ந்து அடித்துக்கொண்டேயிருந்தான்.
அந்த இஸ்ரேல் நாட்டுக்காரன் சிவிலியன் உடையிலேயே இருந்தான். அவன் எனது ஆசன வாயில் ஒரு மரக்கட்டையை குத்தி ஏற்றினான். அத்துடன் துப்பாக்கியின் முனையை வைத்து உள்ளே குத்தினான், இதனால் எனது ஆசன வாயின் உள் பகுதி வெட்டப்பட்டு இரத்தம் வெகுவாக வெளியேறியது. இந்த சமயத்தில் யாராவது காவலாளி என்னை கடந்துச்சென்றால் என்னை அடிப்பார்கள். தொடர்ந்து நான் 36 மணி நேரம் உணவு தரப்படாமல் பட்டினி போடப்பட்டேன். மறு நாள் காலை அந்த இஸ்ரேல் விசாரணை அதிகாரி என் அறைக்குள் வந்து என்னை அந்த சிறைக்கதவின் கம்பிகளில் கட்டிவைத்துவிட்டு பாப் இசைப்பாடகர் போனியின் "பாபிலோனின் நதிகளே" என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தான். இது மறு நாள் காலை வரை தொடர்ந்தது. எனக்குக்கொடுக்கப்பட்ட கடுமையான சித்திரவதையின் காரணமாக நான் எனது கேட்கும் சக்தியை இழந்தேன். எனது மனதையும் இழந்தேன். எனக்கு ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக நான் எனது நினைவையும் இழந்தேன். ஒரு இஸ்ரேலி காவலாளி ஒருவன் வந்து என் முகத்தில் தண்ணீர் தெளிக்கும்போது மாத்திரமே நான் கண் விழிப்பேன். நான் உணர்வுப்பெற்று எழும்பும்போதெல்லாம் மீண்டும் என்னை அடிக்கத்துவங்கி என்னிடம் மீண்டும் போராளிகளின் பெயர்களை கூறு என்றும் என்னென்ன தாக்குதல்களை அமெரிக்க ராணுவ வீரர்களின் மீது தொடுக்குகிறீர்கள் என்றும் கேட்பார்கள். மீண்டும் நான் கூறுவேன் எனக்கு எந்த போராளியின் பெயரும் தெரியாது என்று.தொடர்ந்து அவர்கள் என்னை நீண்ட நேரம் உதைத்துக்கொண்டே இருப்பார்கள்.
நான் இரண்டு வாரங்களாக உடைகளின்றியே சிறை அறைக்குள் கிடத்தப்பட்டேன்.இந்த நேரத்தில் க்ரயினர் என்றழைக்கப்படும் ஒரு அமெரிக்க காவாலாளியும் அவனுடன் மொராக்கோவை சேர்ந்த அய்டல் பாம் (அபு ஹமீத் என்று அவனுக்கு பெயர் உண்டாம்) என்ற யூதனும் எனது அறைக்குள் வந்து எனது கையில் நான் சிறைக்கு வரும் முன்னே இருந்த காயத்தைப் பற்றிக்கேட்டான். நான் கூறினேன் அது அறுவை சிகிட்சை செய்யப்பட்டது என்று. உடனே அவன் எனது கையில் போடப்பட்ட பேன்டேஜை (கட்டை) பிடித்து கடுமையாக இழுத்தான். இதனால் பேன்டேஜுடன் தோலும் சதையும் கிழிந்து எனது கையிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. நான் கடுமையானன் வலியால் துடித்தேன், அவர்களிடம் ஏதாவது வலியைபோக்கும் மாத்திரைகளை (Pain Killer Tablet) கேட்டேன். அதற்கு அவன் எனது கையின் மீது காலை வைத்து மிதித்துவிட்டுக்கூறினான் இது தான் அமெரிக்கன் Pain Killer (அமெரிக்க வலி நிவாரணி) என்று கூறிவிட்டு சிரித்தான். நான் சிறைப்பிடிக்கப்பட்டு 15-வது தினம் எனக்கு ஒரு கம்பளி ஆடையை கொடுத்தார்கள். அதுவரை நான் ஆடையின்றியே இருந்தேன். இதைப்போல் மற்ற கைதிகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.நான் அந்த ஆடையின் நடுவில் ஒரு துவாரம் போட்டு சுவரில் தேய்த்து சுத்தம் செய்துவிட்டு அணிந்தேன். பின்னர் ஒருநாள் ஒரு கைதி என்னை கடந்துச்செல்லும்போது என்னிடம் விசாரணை அதிகாரிகள் அவர்கள் விரும்பும் தகவலை பெறுவதற்காக கடுமையான சித்திரவதைகளை மேற்க்கொள்வதாக கூறினார். பின்னர் என்னை காவலாளிகள் என் தலையில் ஒரு பையை போட்டு கட்டிவிட்டு மீண்டும் விசாரணை அறைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு என்னுடைய தலையிலிருந்து பையை கழற்றினார்கள். அந்த அறையிலுள்ள சுவர்களிலுள்ள சாக்கெட்களில் (Socket) மின்சார வயர்கள் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்தேன். அப்போது அந்த அறைக்குள் மொராக்கோ யூதனாகிய அய்டல் பாமும், இஸ்ரேலிய விசாரணை அதிகாரியும் மற்றும் இரண்டு அமெரிக்க அதிகாரிகளும் வந்தனர். அய்டல் பாமும், இஸ்ரேலியும் சிவிலியன் உடைகளிலேயே இருந்தனர். மற்ற இரண்டு அமெரிக்கர்களும் ராணுவ உடையில் இருந்தனர். அந்த அமெரிக்கர்களின் பெயர்கள் ஃபெடரிம் மற்றும் டேவிஸ். அய்டல் பாம் என்னிடம் அறபு மொழியில் கூறினான் “இதுதான் உனக்கு உயிர்வாழ கடைசி வாய்ப்பு, எங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால்”. நான் கூறினேன் “எனக்கு அமெரிக்கா எதிரான போராட்டத்தைப்பற்றி எதுவும் தெரியாது” என்று. உடனே அவர்கள் என் தலையில் மீண்டும் பையால் கட்டினார்கள். நான் தனிமையில் நீண்ட நேரம் விடப்பட்டேன். இந்த நேரத்தில் சக கைதிகளின் கடுமையான அலறல் சப்தத்தை கேட்டேன். பின்னர் என்னை அவர்கள் ஒரு அட்டைப்பெட்டியின் மீது நிற்கச்சொன்னார்கள். எனது கைகளை நீளவாக்கில் நீட்டச்சொன்னார்கள். எனது கைவிரல்களில் மின்சார வயர்களை பொருத்தினார்கள். பின்னர் மின்சார சுவிட்சைபோட்டார்கள். உடனே எனது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. எனது கண்கள் வெளியே தள்ளியது, மேலும் தீப்பொறி பறந்தது. எனது பற்கள் கடுமையாக நடுங்க ஆரம்பித்து குழப்பமான ஒலியை எழுப்பியது. எனது கால்கள் நடுங்கின. எனது உடல் முழுவதும் ஒருவித நடுக்கத்திற்கு ஆட்பட்டது. எனக்கு இவ்வாறு மூன்று முறை உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறிது நேரம் நீடித்து நிற்கும். ஒருமுறை எனக்கு மின்சாரம் பாய்ச்சப்படும்பொழுது எனது பல் வேகமாக விறைத்ததில் எனது நாவில் வெட்டுப்பட்டு இரத்தம் கடுமையாக வெளியாகியது. இந்த நேரத்தில் என்னை தரையில் படுக்கவைத்து ஒரு மருத்துவரை அழைத்து வந்தார்கள். மருத்துவர் என்னை பரிசோதித்துவிட்டு “சீரியஸ் இல்லை, தொடருங்கள்” என்று கூறிவிட்டு சென்றார். ஆனாலும் எனது வாயிலிருந்து இரத்தம் கடுமையாக வழிந்தோடியதால் எனக்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பதை நிறுத்தினார்கள். ஆனாலும் என்னை கடுமையாக அடித்துக்கொண்டே இருந்தார்கள். திடீரென்று என்னை அடிப்பதை நிறுத்திவிட்டு எனது அறையில் கொண்டுபோய் போட்டார்கள்.
எனக்கு அவர்கள் செய்த சித்திரவதை அனைத்தையும் புகைப்படமெடுத்தார்கள். நான் 49 நாட்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டேன்.இந்த நேரத்தில் அவர்கள் என்னை சித்திரவதைச்செய்யவில்லை.49-வது நாளின் முடிவில் என்னை "சி" முகாமுக்கு மாற்றினார்கள். அங்கு நான் மேலும் 45 நாள்கள் சிறைவைக்கப்பட்டேன். என்னுடைய கைதி ஒருவர் சில காவலாளிகள் நான் தவறுதலாக கைதுச்செய்யப்பட்டதாகவும் விரைவில் விடுதலைச்செய்யப்படுவேன் என்று பேசிக்கொண்டதாக கூறினார். 2004 மார்ச் மாத துவக்கத்தில் நான் விடுதலைச்செய்யப்பட்டேன். என்னை ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுபோனவர்கள் ஒரு நெடுஞ்சாலையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள். சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஒரு காரிலிருந்த நபர் என்னருகில் நிறுத்தி என்னைக்கொண்டு என் வீட்டில் விட்டு விட்டுச்சென்றார். நான் சிறைவாழ்வில் அனுபவித்த சித்திரவதை அனுபவத்தால் சிறைச்சாலையில் அவதிப்பட்டு கொண்டிருக்கும் கைதிகளுக்கு உதவுவதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தினேன். இந்த அமைப்பு சார்பாக இதுவரை 12 சித்திரவதை அனுபவித்த கைதிகளுக்கு உதவியிருக்கிறோம். எனக்கு ஏற்ப்பட்ட இந்த மிகக்கொடூரமான அனுபவத்தை மீண்டும் மீண்டும் நினைத்து கவலைக்கொள்கிறேன். மலேசிய மக்கள் நாங்கள் உதவிக்கேட்டு விடுக்கும் இந்த அழைப்புக்கு பதிலளிப்பார்கள் என நம்புகிறோம். இறைவன் துணைபுரிவானாக!

நான் முறைப்படி பிரகடனப்படுத்தும் இந்த அறிக்கை 1960 சட்டரீதியான பிரகடன சட்டப்படி என் மனசாட்சிக்குட்பட்டு உண்மையானது என கூறுகிறேன்.
ஆதாரம்: GLOBAL RESEARCH இணையதளம்
செய்யது அலி